Tuesday, November 11, 2014

முழுமதி கல்வி மேம்பாட்டுத்திட்டங்கள்

முழுமதி கல்வி மேம்பாட்டுத்திட்டங்கள்
நண்பர்கள் உங்கள் பார்வையில் ஒரு தொடக்கப்பள்ளி எப்படி இயங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அத்தனை கருத்துக்களையும் எங்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம். அதுதொடர்பான புத்தகங்கள் ஏதேனும் இருப்பின் எங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்.
முழுமதி பார்வையில், புதுகரிக்காத்தூர் அரசுப்பள்ளியை முன்மாதிரி அரசுப்பள்ளியாக மாற்ற கீழ்க்கண்ட அடிப்படைக்கூறுகளை செயல்படுத்தவிருக்கிறது.
1. பகுத்தறியும் திறனை வளர்த்தெடுத்தல்:
மாணவர்கள் தங்கள் பாடத்திட்டங்களிலும், அவர்கள் தினசரி வாழ்வில் பார்க்கும், உள்வாங்கும் அனைத்து விடயங்களிலும் ஏன், எதற்கு, எப்படி போன்ற வினாக்களை தங்களுக்குள் எழுப்பி தெளிவுபெற வைப்பது. நூலங்கங்களை அமைத்துக்கொடுப்பதின் மூலம் வாசிப்புத்திறனை வளர்த்தெடுத்தல். கதை சொல்லி வினா எழுப்புதல்.
2. சுயசார்பை வளர்த்தெடுத்தல்:
ஒவ்வொரு மாணவரின் விருப்பங்களை, தனித்திறன்களை கண்டறிவது. மாணவர்கள் விரும்பும் துறையை தேர்ந்தெடுத்து படிக்க வழிகாட்டுவது, இதில் குறிப்பாக பெற்றோரின் திணிப்பு இல்லாத வழிகாட்டுதலோடு மாணவர்களை சுயமாக சிந்தித்து செயல்பட உதவி புரிவது. முழுமதி நண்பர்களுக்கு சுயமாக கடிதம் எழுதும் பழக்கத்தை வளர்த்தெடுத்தல், முழுமதி நண்பர்கள் அனுப்பும் கடிதங்களுக்கு பதில் எழுத பயிற்றுவித்தல். மாணவர்கள் தங்கள் மதிய உணவிற்கு தேவையான காய்கறிகளை தாங்களே பராமரித்து வளர்த்தெடுக்க காய்கறி தோட்டத்தை அமைத்துக்கொடுத்தல்.
3. சமூகம் சார்ந்த சிந்தனையை வளர்த்தெடுத்தல்:
சமூகத்தில் தனிமனித ஒழுக்கம் பற்றி விவரித்தல், பொது சொத்தை பராமரித்தல், சாலை விதிகளை பின்பற்றுதல், பொது இடங்களை தூய்மையாக வைத்தல், மரம் நட்டு பராமரித்தல், தீண்டாமையை ஒழித்து சமூக நீதியை நிலைநாட்டுதல், தாத்தா பாட்டி, தாய் தந்தையருக்கு உதவியாய் இருத்தல் என்பன போன்ற அடிப்படை ஒழுக்கங்களை பயிற்றுவித்தல்.
4. தாய்மொழி முக்கியத்துவமும் பிறமொழியின் தேவையும்:
மனிதராக பிறந்தவரின் முதல் அடையாளம் அவரின் தாய்மொழி. சிந்திக்கும் திறன் மற்ற மொழிகளை விட தாய்மொழியில் தான் அதிகம் என்பதை செயல்விளக்கங்கள் மூலம் விவரித்தல், தமிழர் வரலாறு நிறைந்திருக்கும் பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச்செல்லுதல் போன்றவற்றின் மூலம் தாய்மொழிப்பற்றை வளர்த்தெடுத்தல். இன்றைய காலகட்டத்தில் அனைத்து அறிவியல் தொழில்நுட்பங்கள் தமிழில் முழுவதுமாக கிடைக்கப்பெறாததால் பிறமொழிகளான ஆங்கிலம், ய(ஜ)ப்பானிய மொழிகளை ஒரு மொழியாக மட்டும் கற்றுக்கொடுத்தல். இவர்கள் மூலம் பிற்காலத்தில் அனைத்து அறிவியல் தொழில்நுட்பங்களும் தமிழில் கிடைக்கப்பெறவேண்டிய அவசியத்தை விதைத்தல்.
5. அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த அறிவை வளர்த்தெடுத்தல்:
ஒவ்வொரு பாடத்திட்டத்தின் தொடக்கத்தில் அதன் பாடச்சுருக்கம் மற்றும் பாடத்தின் முடிவில் அதன் முடிவுரையை தெளிவாக கட்டமைப்பத்துக்கொடுப்பது. இதன் மூலம் அந்த பாடத்திட்டத்தின் தொடக்கத்தில் நாம் என்ன கற்கவிருக்கிறோம், முடிவில் என்ன கற்றுக்கொண்டோம் என்பதனை எளிமையாக புரிந்துகொள்ள வழிவகுப்பது. செயல்வழிக்கல்வி மூலம் பாடத்திட்டத்தை மேலும் எளிமையாக விளக்குவது. தொழில்நுட்ப அறிவை வளர்க்கக்கூடிய சாதனங்களை வழங்கி அதனை கையாளப் பயிற்றுவித்தல். மூன்று மாதத்திற்கொருமுறை கலை அல்லது அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தல் அல்லது அழைத்துச்செல்லுதல். பாரம்பரிய விளையாட்டு உட்பட அனைத்துவித விளையாட்டுகளையும் ஊக்குவித்தல்.
இதனை செயல்படுத்த முழுமதி உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்களுடனும், முழுமதி தன்னார்வலர்களுடனும் பல்வேறு குழுக்களாக இணைந்து செயல்படவிருக்கிறார்கள். மேற்கண்ட அடிப்படைக்கூறுகளில் எவையேனும் சேர்க்கவோ குறைக்கவோ வேண்டியிருப்பின் நண்பர்கள் தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறோம்.
இப்படிக்கு
முழுமதி நிர்வாகம்
http://muzhumathi.org/Tamil/

No comments:

Post a Comment